தேடு

திங்கள், 13 ஜூலை, 2015

ஆர்க்கிமிடீஸ் (கி.மு. 287 - கி.மு. 212)

Archimedes
பண்டைய உலகின் தலைசிறந்த கணித மேதையாகவும் விஞ்ஞானியாகவும் போற்றப்படுபவர். ஆர்க்கிமிடீஸ் ஆவார். நெம்புகோலின் தத்துவத்தையும் வீத எடைமான (specific Gravity) கோட்பாட்டையும் கண்டுபிடித்தவர் ஆர்க்கிமிடீஸ் தான் என்பர். எனினும், உண்மையில் ஆர்க்கிமிடீசுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நெம்புகோல் அறியப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வந்தது. நெம்புகோலின் செயல் விளைவை விவரிக்கும் சூத்திரத்தை முதன் முதலில் வகுத்துரைத்தவர் ஆர்க்கமிடீஸ் தான் என்று தெரிகிறது. ஆனால், ஆர்க்கிமிடீசுக்கு நெடுங்காலத்திற்கு முன்னரே, எகிப்தியப் பொறியியல் வல்லுநர்கள் நெம்புகோல்களைப் பயன்படுத்துவதில் தேர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.
அதே போன்று, ஒரு பொருளின் மொத்த எடைக்கு மாறான அப்பொருளின் அடர்த்தி (கன அளவுடன் எடை மானத்துக்குள்ள விகிதம்) பற்றிய கோட்பாடு ஆர்க்கிமிடீசுக்கு முன்பே அறியப்பட்டிருந்தது. ஆர்க்கிமிடீசும், மணி முடியும் பற்றி வழங்கும் புகழ்பெற்ற கதை ("கண்டுபிடித்து விட்டேன்" என்று கூவிக்கொண்டே ஆர்க்கிமிடிஸ் குளிக்கும் தொட்டியிலிருந்து குதித்துத் தெருக்களில் ஆடையின்றி ஓடியதாக இக்கதை முடிகிறது). ஆர்க்கிமிடீஸ் கண்டுபிடித்ததாகக் கூறப்படும் கோட்பாடும், ஒரு புதிய கோட்பாடு அன்று. ஏற்கெனவே நிலவிய ஒரு கொள்கையை, அவர் குறிப்பிட்ட சிக்கலுக்குத் தீர்வு காண வெற்றிகரமாகக் கையாண்டார்.
கணித வல்லுநர் என்ற முறையில் ஆர்க்கிமிடீஸ் தலை சிறந்தவராக விளங்கினார் என்பதில் ஐயமில்லை. முழுமைத் தொகையீட்டுக் கலன கணிதத்தை (Integral Calculus) ஐசக் நியூட்டன் கண்டுபிடிப்பதற்கு 8 நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஆர்க்கிமிடிஸ் அக்கணிதத்திற்கு மிக அருகில் நெருங்கி விட்டார் எனலாம். ஆனால், தீவினைப் பயனாக அவருடைய காலத்தில் வசதியான கணிதக் குறிமான முறை (Mathematical Notation) இல்லாதிருந்தது. அதுபோலவே, அவருக்கு அடுத்து வந்த கணித அறிஞர்களில் எவரும் அவரைப் போன்று முதல்தரக் கணித மேதையாக விளங்கவில்லை. அதன் விளைவாக ஆர்க்கிமிடீசின் அற்புதமான கணித நுண்ணறிவுத் திறனுக்கு அதற்குரிய நற்பலன் கிடைக்காமற் போயிற்று. எனவே. ஆர்க்கிமிடீசின் திறமை தன்னேரிலாததாக இருந்தபோதிலும், உள்ளபடிக்கு அவருடைய செல்வாக்கு, இந்நூறு பேரில் அவரைச் சேர்க்கும் அளவுக்கு அதிகமாக இருக்கவில்லை.

கருத்துகள் இல்லை: