தேடு

வரலாற்று சுவடுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வரலாற்று சுவடுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 1 ஏப்ரல், 2013

சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள காந்தி மறுப்பு

இந்திய சுதந்திரத்துக்காகப் போராடி அந்த லட்சியத்தில் வெற்றி பெற மகாத்மா காந்தி, சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ளவில்லை என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? மற்ற நாடுகளில் எல்லாம், அந்த நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர்கள்தான், நாடு சுதந்திரம் பெற்றவுடன் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுள்ளனர். 

அமெரிக்காவின் விடுதலைக்காகப் பாடுபட்ட ஜார்ஜ் வாஷிங்டன் அந்த நாடு சுதந்திரம் பெற்றதும் ஜனாதிபதியானார். அயர்லாந்தின் சுதந்திரத்துக்காகப் போராடிய டிவேலரா, அந்த நாடு விடுதலை பெற்றதும் ஜனாதிபதி பதவி ஏற்றார். ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து ரஷியாவை மீட்ட லெனின், அந்த நாட்டின் பிரதமர் ஆசனத்தில் அமர்ந்தார். 

இந்தியாவில் இருந்து பிரிக்கப்பட்ட பகுதிகளைக் கொண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி பாகிஸ்தான் என்ற சுதந்திர நாடு உதயமானபோது, பாகிஸ்தான் பிரிவினைக்குப் பாடுபட்ட ஜின்னா, அந்த நாட்டின் கவர்னர் ஜெனரலாக (ஜனாதிபதிக்கு இணையானபதவி) பொறுப்பேற்றார். ஆனால் மகாத்மா காந்தியோ, இந்தியா விடுதலை பெற்ற தினமான ஆகஸ்ட் 15-ந்தேதி, கல்கத்தா வீதிகளில் ஒரு எளிய மனிதராக நடமாடிக்கொண்டிருந்தார்! \

அவர் டெல்லியில் தங்காமல் கல்கத்தா சென்றதற்கு முக்கிய காரணம் இருந்தது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும், மீண்டும் வகுப்புக் கலவரங்கள் மூண்டிருந்தன. குறிப்பாக கல்கத்தாவில் கலவரம் பயங்கரமாக இருந்தது. இதுவரை சுதந்திரத்துக்காகப் போராடிய காந்தியடிகள், இனி வகுப்புக் கலவரங்களுக்கு முடிவு கட்டி, அமைதியை நிலைநாட்டுவதே தனது முதல் கடமை என்று கருதினார். 

கலவரப்பகுதிகளில் அமைதி யாத்திரை மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறவும் கல்கத்தாவுக்குச் செல்ல முடிவு செய்தார். "சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ளுங்கள். பிறகு கல்கத்தாவுக்குப் போகலாம்" என்று காங்கிரஸ் தலைவர்கள் கேட்டுக்கொண்டார்கள். 

ஆனால், காந்தி மறுத்துவிட்டார். "சுதந்திரச் செய்தி" கூட வெளியிடாமல், கல்கத்தாவுக்குச் சென்றார். கலவரப் பகுதிகளில் நடந்து சென்றார். அமைதியாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். ஆகஸ்ட் 15-ந்தேதி நாடெங்கும் சுதந்திரத் திருநாள் மகிழ்ச்சிப் பெருக்குடன் கொண்டாடப்பட்டது. அன்று கல்கத்தாவில் காந்தி உண்ணாவிரதம் இருந்தார்; 

நூல் நூற்றார்; பிரார்த்தனை நடத்தியபின், கல்கத்தா நகரைச் சுற்றிப் பார்த்தார். அமைதி திரும்பிக்கொண்டிருப்பதையும், இந்துக் களும், முஸ்லிம்களும் நேச முறையில் பழகுவதையும் கண்டு மகிழச்சி அடைந்தார். கல்கத்தாவில் ஒரு முஸ்லிம் நண்பர் வீட்டில் காந்தி தங்கியிருந்தார். ஆகஸ்ட் 31-ந்தேதி இரவு, சில இளைஞர்கள் வந்து கதவைத் தட்டினர். காந்தி வெளியே வந்தார். 

கோபத்துடன் நின்றுகொண்டிருந்த இளைஞர்களைப் பார்த்து, வணக்கம் தெரிவித்தார். கூட்டத்திலிருந்து ஒருவன் காந்தியை நோக்கி ஒரு செங்கல்லை வீசினான். ஆனால் அது குறி தவறி, அருகில் நின்று கொண்டிருந்த காந்தியின் நண்பரைத் தாக்கியது. கூட்டத்திலிருந்த ஒரு வாலிபன், தன் கையிலிருந்த தடியை காந்தியை நோக்கி வீசினான். 

காந்தியின் தலையை நோக்கிப் பறந்த அந்தத்தடி, நூலிழையில் குறி தவறியது. இதற்கிடையே போலீசார் அங்கு வந்து, கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசி, கூட்டத்தைக் கலைத்தனர். இந்த நிகழ்ச்சி நடந்த மறுநாள் (செப்டம்பர் 1) காந்தி ஒரு அறிக்கை விடுத்தார். "கலகக்காரர்களுடன் நேருக்கு நேர் சந்தித்துப் பேசினால் பலன் கிடைக்கும் என்று நினைத்தேன். 

நடக்கவில்லை. எனவே இன்று முதல் "சாகும் வரை உண்ணாவிரதம்" தொடங்குகிறேன். கலவரம் அடங்கினால் தவிர உண்ணாவிரதத்தை நிறுத்தமாட்டேன் என்று அறிவித்துவிட்டு, உண்ணாவிரதம் தொடங்கினார். இந்த உண்ணாவிரதம் அனைவரையும் உலுக்கியது. முஸ்லிம்களும் மற்றும் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் அவரிடம் சென்று, இனி அமைதிக்குப் பாடுபடுவதாகக் தெரிவித்தனர். 

கல்கத்தாவின் வடக்குப்பகுதியில், பிரிட்டிஷ் போலீஸ் அதிகாரிகள் உள்பட 500 பேர், தங்கள் பணிகளைச் செய்தபடி காந்திக்கு ஆதரவாக அனுதாப உண்ணாவிரதம் இருந்தனர். கலவரங்களுக்குக் காரணமானவர்கள், கூட்டம் கூட்டமாகச் சென்று, "இனி வன்முறையில் ஈடுபடமாட்டோம்" என்று காந்தி முன்னிலையில் சபதம் செய்தனர். 

உண்ணாவிரதம் தொடங்கிய 4-வது நாள் (செப்டம்பர் 4) அதிகாரிகள் காந்தியை சந்தித்து "கல்கத்தாவில் அமைதி திரும்பியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் வன்முறை சம்பவம் எதுவும் நிகழவில்லை" என்று தெரிவித்தார்கள். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ பிரதிநிதிகள் காந்தியைச் சந்தித்து, "அமைதி காப்போம்" என்று உறுதிமொழி எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுத்தனர். 

அதைத்தொடர்ந்து,உண்ணாவிரத்தை முடித்துக்கொள்ளத் தீர்மானித்தார். காந்தி, செப்டம்பர் 4-ந்தேதி இரவு 9.15 மணிக்கு, அன்றைய வங்காள முதல்-அமைச்சர் எச்.எஸ்.சுஹ்ரவர்த்தி கொடுத்த ஆரஞ்சுப்பழச்சாற்றை அருந்தி, உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். அதன் பிறகு, கல்கத்தா நகரில் கலவரம் ஏதும் நடக்கவில்லை. 

அமைதியை நிலைநாட்ட காந்தி ஆற்றிய அரும்பணியை, கவர்னர் ஜெனரல் மவுண்ட் பேட்டன் பிரபு வானொலியில் பேசியபோது பாராட்டினார். "50 ஆயிரம் படை வீரர்களாலும் அடக்க முடியாத கலவரத்தை காந்தி தன்னந்தனியாய் அடக்கி அமைதிப்படுத்தினார்" என்று புகழாரம் சூட்டினார். கல்கத்தாவிலிருந்து செப்டம்பர் 7-ந்தேதி காந்தி டெல்லிக்குத் திரும்பினார். 

கலவரம் அதிகமாக நடந்து கொண்டிருந்த பஞ்சாப் மாநிலத்துக்குச் செல்ல அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் டெல்லியிலேயே கலவரங்கள் நடப்பதை அறிந்து கவலை அடைந்தார். எனவே, மீண்டும், "சாகும் வரை உண்ணாவிரதம்" இருக்கப்போவதாக அறிவித்தார். 

இம்முறை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தபோது, டாக்டர்களையோ, நேரு, படேல் முதலிய தலைவர்களையோ அவர் கலந்து ஆலோசிக்கவில்லை. 1948 ஜனவரி 14-ந்தேதி காந்தி உண்ணாவிரதம் தொடங்கினார். வாழ்நாளில் மகாத்மா காந்தி கடைசியாக இருந்த உண்ணாவிரதம் இதுதான். 

உண்ணாவிரதம் இருந்தபோது காந்திக்கு வயது 78. உண்ணாவிரதம் தொடங்கிய மூன்றாம் நாள், அவர் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்தது. அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், "உண்ணாவிரதத்துக்குப் பிறகு காந்தி பிழைத்தாலும், அவர் உடல் நலம் நிரந்தரமாகப் பாதிக்கப்படலாம். சிறுநீரகங்களில் கோளாறு ஏற்படலாம்" என்று எச்சரித்தனர். 

ஆனாலும் காந்தி எதற்கும் கலங்காமல் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். உண்ணாவிரதத்தின் 4-வது நாள் ஒரு கட்டிலில் சாய்ந்தபடி ஒலிபெருக்கி மூலம் மக்களிடையே பேசினார். "என் மரணம் குறித்தோ அல்லது உண்ணாவிரதத்துக்குப்பிறகு ஏற்படக்கூடிய உடல் ஊனம் பற்றியோ நான் அஞ்சவில்லை.

டாக்டர்கள் விடுத்துள்ள எச்சரிக்கையாவது, மக்களை ஒன்றுபடுத்தி அமைதியை நிலைநாட்ட உதவும் என்று நம்புகிறேன்" என்றார் காந்தி. உண்ணாவிரதத்தின் ஐந்தாம் நாள் காந்தியைச் சென்று பார்த்தார்நேரு. காந்தியின் உடல் நிலை மிகவும் மோசமாகியிருந்தது. நேருவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. 

உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான தந்திகள் காந்திக்கு வந்து குவிந்தன. பாகிஸ்தானில் இருந்தும் ஏராளமான முஸ்லிம்கள் தந்திகள் அனுப்பியிருந்தனர். அமைதி காப்பதாக, எல்லா மதத்தினரும் காந்தியிடம் சென்று உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று, அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த ராஜேந்திரபிரசாத் அறிக்கை விடுத்தார். 

அதன்படி ஜனவரி 18-ந்தேதி ராஜேந்திரபிரசாத்தின் இல்லத்திலிருந்து அனைத்து மதங்களையும் சேர்ந்த 100 தலைவர்கள், காந்தி தங்கியிருந்த பிர்லா மாளிகைக்குச் சென்றனர். நேருவும், அபுல்கலாம் ஆசாத்தும் ஏற்கனவே அங்கு வந்திருந்தனர். மத நல்லிணக்கத்தை காப்பதாக, காந்திஜி முன்னிலையில் அனைத்து மதத்தலைவர்களும் உறுதி கூறி, கையெழுத்திட்டனர். 

அங்கு வந்திருந்த பாகிஸ்தான் தூதரும் கையெழுத்திட்டார். இதைத்தொடர்ந்து, உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வ தாகக் காந்தி அறிவித்தார். அபுல்கலாம் ஆசாத் கொடுத்த ஆரஞ்சுப் பழரசத்தைப் பருகி, உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். இதன் பிறகு அமைதி திரும்பும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத சம்பவம் நடந்தது. 

காந்தியின் மரணம்

தினமும் மாலை அங்குள்ள மைதானத்திற்குச் சென்று பிரார்த்தனைக்கூடத்தில் பேசுவது வழக்கம். கடைசியாக உண்ணாவிரதம் இருந்தபின், அவர் உடல் மிகவும் சோர்வடைந்திருந்தது என்றாலும் மாலையில் பிரார்த்தனை கூட்டத்திற்கு செல்லத் தவறுவதில்லை. 1948 ஜனவரி 30-ந்தேதி வெள்ளிக்கிழமை, வழக்கம்போல அதிகாலை 3.30 மணிக்கு தூக்கம் கலைந்து எழுந்தார், காந்தியடிகள். 

சிறிது நேரம் பிரார்த்தனை செய்தார். எலுமிச்சை ரசமும், தேனும் கலந்த வெந்நீர் பருகினார். பின்னர் தன் அறைக்குள்ளேயே சிறிது நேரம் உலாவினார். 8 மணிக்கு தன் உதவியாளர் பியாரிலாலை அழைத்து, காங்கிரஸ் கட்சியின் விதிகளில், தான் செய்ய உத்தேசித்திருந்த மாறுதல் களைக் கொடுத்துப் படித்துப் பார்க்கச்சொன்னார். 

பிறகு பத்திரிகைகள் படித்தார். இந்தக் காலக்கட்டத்தில், தமிழ்நாட்டில் (பழைய சென்னை மாகாணம்) கடும் உணவுத் தட்டுப்பாடு நிலவியது. அதுபற்றி பியாரிலாலிடம் பேசினார். "தென்னை, பனை, வேர்க்கடலை, வாழை ஆகியவற்றையும், பலவிதமான கிழங்குகளையும் தமிழ்நாட்டுக்கு இயற்கை வழங்கியிருக்கிறது. 

அப்படியிருக்க அங்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது வருந்தத்தக்கது. இயற்கை வளங்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதை மக்களுக்குத் தெரிவித்தால், அவர்கள் பட்டினி கிடக்கவேண்டிய அவசியம் இருக்காது" என்றார். உணவுப்பிரச்சினையைச் சமாளிப்பது எப்படி என்பது பற்றி குறிப்பு தயாரிக்கும்படி தன் செயலாளரிடம் கூறி விட்டுக் குளிக்கச் சென்றார். 

குளித்துவிட்டு வந்தபின், 9.30 மணிக்கு வங்காளி மொழிப் பாடங்களை கற்கலானார். உணவு பின்னர் காலை உணவாக 12 அவுன்ஸ் ஆட்டுப்பால், பச்சை முள்ளங்கி, தக்காளிப் பழப் பச்சடி, ஆரஞ்சு ரசம், வேக வைத்த காய்கறிகள், இஞ்சிச் சாறு ஆகியவற்றை அருந்தினார். பியாரிலால், காங்கிரஸ் விதிகளில் மாற்றம் செய்வது பற்றி தன் கருத்துக்களை எழுதிக் கொடுத்தார். 

அதைக் காந்திஜி ஆழ்ந்து பரிசீலனை செய்தார். பிறகு படுத்துத் தூங்கினார். பகல் 12 மணிக்கு எழுந்து, தேன் கலந்த வெந்நீர் குடித்தார். டெல்லியைச் சேர்ந்த முஸ்லிம் தலைவர்களுக்கு பேட்டி அளித்தார். தனக்கு வந்திருந்த கடிதங்களைப்படித்துப் பதில் எழுதினார். பிற்பகல் 2.15 மணிக்கு காந்தி வழக்கம்போல பேட்டிகள் அளிக்கத் தொடங்கினார். 

இலங்கை பிப்ரவரி 14-ந்தேதி சுதந்திரம் பெறுவதால், சுதந்திர தினச்செய்தி வாங்கிச் செல்வதற்காக இலங்கையிலிருந்து டாக்டர் டி.சில்வா வந்திருந்தார். உடன் வந்திருந்த அவருடைய மகள், காந்தியிடம் கையெழுத்து வாங்கினாள். மகாத்மா போட்ட கடைசிக் கையெழுத்து இதுதான். மாலை 4 மணிக்கு சர்தார் பட்டேல் வந்தார். 

அவரும், காந்தியும் தனியாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். பட்டேலுடன் அவர் மகள் மணிபென் பட்டேலும் இருந்தார். 4.30 மணிக்கு பேத்தி ஆபா காந்தி, மாலை உணவைக் கொண்டு போய்க்கொடுத்தார். 12 அவுன்ஸ் ஆட்டுப்பால், 12 அவுன்ஸ் காய்கறி சூப், ஆரஞ்சு ரசம், வேக வைத்த காய்கறிகள் ஆகியவற்றை காந்திஜி அருந்தினார். 

மாலை 5 மணி, வழக்கமாக பிரார்த்தனைக் கூட்டத்தில் இருக்க வேண்டிய நேரம். பட்டேல், தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அவருக்கும், நேருவுக்கும் கருத்து வேற்றுமை இருந்து வந்தது. காந்திஜி அவ்வப்போது தலையிட்டுச் சமாதானப்படுத்தி வந்தார். பட்டேல் ராஜினாமாச் செய்து விடலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தார். 

அவரைக் காந்தி சமாதானப்படுத்தினார். பத்து நிமிடம் தாமதமாக 5.10 மணிக்கு பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் புறப்பட்டார். பேத்திகள் மனு காந்தி, ஆபா காந்தி ஆகிய இருவருடைய தோள்களில் சாய்ந்தபடி நடந்து சென்றார். ஆபா காந்தியுடன் அவர் நகைச்சுவையாக பேசியபடி சென்றார். பிரார்த்தனைக் கூட்டத்திற்கு சுமார் 500 பேர் வந்திருந்தனர். 10 நிமிடம் தாமதமாகி விட்டதால் காந்தி சற்று வேகமாக நடந்தார். 

கூடியிருந்தவர்களில் பலர் எழுந்து நின்று, வழி விட்டபடி வணங்கினர். காந்தியும் பதிலுக்குக் கை கூப்பி வணங்கினார். திடீரென்று ஒரு இளைஞன், இடது பக்கத்திலிருந்து கூட்டத்தை விலக்கியபடி வந்தான். அவன் காந்தியின் பாதங்களைத் தொட்டு வணங்குவதற்கு வருவதாக மனு காந்தி நினைத்தார். யாரும் தன் காலில் விழுவதை காந்தி விரும்புவதில்லை. 

எனவே மனு காந்தி, "வேண்டாம். பாபு விரும்பமாட்டார்" என்று தடுத்தார். அந்த இளைஞன், மனு காந்தியைப் பிடித்து அப்பால் தள்ளி விட்டான். மனுவின் கையிலிருந்த காந்தியடிகளின் நோட்டுப் புத்தகம், ஜபமாலை, எச்சில் படிகம் ஆகியவை கீழே விழுந்தன. அவற்றை எடுப்பதற்காக, மனு காந்தி கீழே குனிந்தார். 

கண் மூடிக்கண் திறப்பதற்குள் அந்த இளைஞன் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, காந்திஜிக்கு எதிரே இரண்டு அடி தூரத்திலிருந்து மூன்று முறை சுட்டான். மூன்று குண்டுகளும் காந்தியின் மார்பில் பாய்ந்தன. அவற்றில் இரண்டு குண்டுகள் உடலை ஊடுருவிச்சென்று விட்டன. ஒரு குண்டு, இதயத்துக்கு உள்ளேயே இருந்து விட்டது. 

முதல் குண்டு பாய்ந்ததும், காந்திஜியின் கால் தடுமாறியது. வணங்கியபடியிருந்த கைகள், கீழே சரிந்தன. இரண்டாவது குண்டு பாய்ந்ததும், அவருடைய உடையில் ரத்தக்கறை படிந்தது. அவர் "ஹே... ராம்" என்று இரண்டு முறை சொன்னார். மூன்றாவது குண்டு பாய்ந்ததும், தரையில் ஈர மண்ணிலும், புல் தரையிலும் விழுந்தார்.  

அப்போது மணி 5.17. காந்தியின் உடலை, பிர்லா மாளிகைக்கு எடுத்துச் சென்றனர். தகவல் அறிந்து வல்லபாய் பட்டேல் விரைந்து வந்தார். காந்தியின் நாடியைத் தொட்டுப் பார்த்தார். இலேசாக நாடி துடிப்பது போலத்தோன்றியது. இதற்குள் டாக்டர் டி.பி.பார்க்கவா வந்து சேர்ந்தார். அவர் பரிசோதித்து விட்டு "காந்திஜி உயிர் பிரிந்து பத்து நிமிடங்கள் ஆகிவிட்டன" என்று தெரிவித்தார். 

இதற்கிடையே, காந்தியடிகளை சுட்டுக் கொன்றவனை போலீசார் கைது செய்தனர். அவன் தப்பி ஓட எவ்வித முயற்சியும் செய்யவில்லை. துப்பாக்கியுடன் நின்ற அவனை, கூட்டத்தினர் ஆவேசத்துடன் தாக்கினர். அந்த தாக்குதல் நீடித்திருந்தால், கொலையாளி கொல்லப்பட்டிருக்கலாம். 

போலீசார் தலையிட்டு அவனை மீட்டு, துப்பாக்கியை கைப்பற்றினர். கொலையாளி பாதுகாப்புடன் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு போகப்பட்டான். அவனிடம் நடத்திய விசாரணையில் அவன் பெயர் நாதுராம் விநாயக் கோட்சே என்றும், 37 வயதான அவன் புனா நகரை சேர்ந்தவன் என்றும் தெரியவந்தது. 

தனுஷ்கோடியை விழுங்கிய புயல்


தமிழ்நாட்டில் பல்வேறு சமயங்களில் பெரும் புயல் வீசியிருக்கிறது. எனினும், 1964 டிசம்பரில் வீசிய புயல், வரலாறு கண்டறியாத அளவுக்கு பயங்கரமாக இருந்தது. மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில், பேய் மழையுடன் புயல் வீசியது. ராமேசுவரத்தில், புயலின் வேகம் கடுமையாக இருந்தது. புயல் காரணமாக, கடலில் அலை பயங்கரமாக இருந்தது.
தென்னை மர உயரத்துக்கு அலைகள் சீறிப்பாய்ந்து கரையில் மோதின. திடீர் என்று கடல் பொங்கி, ராமேசுவரம் தீவில் உள்ள, தனுஷ்கோடிக்குள் புகுந்தது. அந்த சமயத்தில், தனுஷ்கோடி ரெயில் நிலையத்திலும், சுங்க இலாகா பரிசோதனை நடைபெறும் இடத்திலும் சுமார் ஆயிரம் பேர்கள் இருந்தனர். அவர்களில் 500 பேர் செத்திருக்கவேண்டும் என்று முதலில் வந்த தகவல்கள் கூறின.
ஆனால், தனுஷ்கோடி அடியோடு அழிந்து, கடலில் மூழ்கி விட்டதால், சாவு எண்ணிக்கை 1,000-க்கு மேல் இருக்கும் என்று பின்னர் மதிப்பிடப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள மண்டபம் என்ற இடத்தையும், ராமேசுவரம் தீவையும் இணைப்பது "பாம்பன் பாலம்." இது கடலில் அமைக்கப்பட்டது. கப்பல் வரும்போது, இந்தப்பாலம் இரண்டாகப் பிரிந்து, கப்பலுக்கு வழிவிடும்.
இந்த அதிசயப் பாலம், பலத்த சேதம் அடைந்தது. புயல் வீசுவதற்கு முன், ராமேசுவரத்தில் இருந்து, தனுஷ்கோடிக்கு ஒரு ரெயில் புறப்பட்டுச் சென்றது. தனுஷ்கோடியை நெருங்கிக் கொண்டிருந்தபோது, பலத்த மழையுடன் சூறாவளி வீசியது. உடனே ரெயில் நிறுத்தப்பட்டது. எனினும் சற்று நேரத்தில் கடல் பொங்கி, தனுஷ்கோடியை விழுங்கியபோது, ரெயிலும் கடலில் மூழ்கியது. ரெயிலில் 115 பேர் பயணம் செய்தனர்.
அவர்கள் அவ்வளவு பேரும் கடலில் மூழ்கி பலியாகி விட்டார்கள் என்று, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 40 கல்லூரி மாணவர்கள், ராமேசுவரத்துக்கு உல்லாசப் பயணம் வந்திருந்தனர். கடலில் மூழ்கிய ரெயிலில் அவர்கள் பயணம் செய்தனர் என்ற தகவல் பின்னர் தெரியவந்தது.
அந்த 40 பேரும் கடலில் மூழ்கி இறந்து விட்டார்கள். தனுஷ்கோடியில் இருந்த பெரிய கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. பெரும்பாலான வீடுகளும், கட்டிடங்களும் கடலுக்குள் மூழ்கிவிட்டன. தந்தி, டெலிபோன் கம்பங்கள் சாய்ந்து விழுந்து விட்டதால், ராமேசுவரம் தீவுக்கும், வெளி உலகத்துக்கும் இடையே தகவல் தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு விட்டன.
இதனால் சேதத்தின் முழு விவரங்களும் உடனடியாக சென்னைக்குத் தெரியவில்லை. கடலுக்குள் மூழ்கி பலியாகாமல் உயிர் தப்பியவர்கள், மணல் திட்டுகளில் தவித்தனர். அவர்களைக் காப்பாற்ற கப்பல்கள், மோட்டார் படகுகள், "ஹெலிகாப்டர்" விமானங்கள் அனுப்பப்பட்டன. ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதிக்கு முன்பு ரெயில் மூலம்தான் குடிநீர் அனுப்பப்பட்டு வந்தது.
புயல்-மழை வீசியதைத் தொடர்ந்து அங்கு குடிநீரே இல்லாமல் போய்விட்டது. உயிர் தப்பியவர்கள், குடிக்கத் தண்ணீர் இன்றி தவித்தனர். அவர்களுக்காக ஹெலிகாப்டர் விமானத்தில் தண்ணீர் அனுப்பப்பட்டது. விமானத்தில் இருந்து சாப்பாடு பொட்டலங்களும் போடப்பட்டன. உயிர் பிழைத்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க, மதுரையில் இருந்தும், மற்ற இடங்களில் இருந்தும் ராமேசுவரத்துக்கும் டாக்டர்கள் அனுப்பப்பட்டனர்.
"சாரதா" என்ற கப்பல், தனுஷ்கோடிக்குச் சென்று 135 பேர்களை காப்பாற்றியது. அவர்கள், மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு, கரையில் இறக்கி விடப்பட்டனர். தனுஷ்கோடி பகுதியில் வெள்ளம் வடிவதற்கு 4 நாட்கள் ஆயின. கடற்கரையில் எங்கு பார்த்தாலும், பிணங்கள் குவியல் குவியலாகக் கிடந்தன.
புயல்-கடல் கொந்தளிப்பால் சேதம் அடைந்த பாம்பன் பாலம், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. இதை, 1914-ம் ஆண்டில், தென் இந்திய ரெயில்வே தலைமை என்ஜினீயராக இருந்த ஒசன்சே என்ற வெள்ளைக்காரர் அமைத்தார். இந்தப்பாலம் கட்டப்படுவதற்கு முன்னால், தமிழ்நாட்டில் இருந்து படகு மூலம்தான் ராமேசுவரத்துக்கு போகவேண்டி இருந்தது.
இந்தப்பாலம் 6,700 அடி நீளம் கொண்டது. இதை அமைக்க 2,600 டன் இரும்பு செலவாயிற்று. கட்டி முடிக்க 1 ஆண்டு பிடித்தது. முன் காலத்தில், ராமேசுவரம் தனித்தீவாக இருக்கவில்லை. தமிழ்நாட்டுடன் சேர்ந்தே இருந்தது. 1573-ம் ஆண்டில் பெரும் புயல் அடித்து, கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது.
அப்போது ராமேசுவரம் பகுதி துண்டிக்கப்பட்டு தனித்தீவாக மாறிவிட்டது. அதன்பின், பாம்பன் பாலம் கட்டப்படுகிறவரை, படகு மூலமாகவே மக்கள் ராமேசுவரம் போய் வந்தார்கள். தனுஷ்கோடிக்கு நேரில் சென்ற "தினத்தந்தி" நிருபர் தெரிவித்த தகவல் வருமாறு:-
"நானும், என் நண்பர்களும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தனுஷ்கோடிக்கு சென்றோம். பல இடங்களில் நீந்திச் சென்றோம். கடலில் மூழ்கிய ரெயிலில் 300 பேர் இருந்ததாக தெரியவருகிறது. அவ்வளவு பேரும் பலியாகிவிட்டார்கள். என்ஜினுக்கு கீழே டிரைவரின் பிணம் கிடந்தது. கடலில் பிணங்கள் மிதக்கின்றன.
நாங்கள் 50 பிணங்கள் வரை எண்ணினோம். பிணங்களை கழுகுகள் கொத்தித்தின்ற கோரக்காட்சியைக் கண்டு மனம் பதறியது. எங்கு போனாலும் பிண நாற்றம் தாங்க முடியவில்லை. தனுஷ்கோடியில் வசித்த சுமார் 2 ஆயிரம் பேரில், பாதிக்கு மேற்பட்டவர்கள்
பலியாகிவிட்டார்கள். உயிர் தப்பியவர்கள் கதறி அழுவதைப் பார்க்கும்போது, நெஞ்சம் உருகுகிறது. சோறு, தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள். பலர் குடும்பத்தோடு ராமேசுவரத்தை நோக்கி நடந்து செல்கிறார்கள்.
ராமேசுவரம் தெருக்களில் உடைந்த படகுகள் கிடக்கின்றன. மழையில் உடைமைகள் அனைத்தையும் இழந்த ஒருவர், கட்டிக்கொள்ள வேட்டி இல்லாமல், இறந்து போன தன் மனைவியின் சேலையால் உடம்பை மூடி மறைத்துக்கொண்டு அழுத காட்சி கல் மனதையும் கரையச் செய்வதாய் இருந்தது."
இவ்வாறு நிருபரின் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இறந்தவர்களில் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டவர்களின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 100 பெயர்கள் அடங்கியிருந்தன. அடையாளம் தெரியாத, அழுகிப்போன பிணங்களை பெரிய குழிகளைத் தோண்டி புதைத்தார்கள். 28-ந்தேதி வரை 150 பிணங்கள் புதைக்கப்பட்டன.
தனுஷ்கோடியை புயல் தாக்கிய அதே நேரத்தில், இலங்கையின் வடக்கே, தலைமன்னார், யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் பயங்கரப்புயல் வீசியது. (இந்தப் பகுதிகளில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள்.) தலைமன்னார் பகுதியில் 1,500 பேர் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இவர்களில் பலருடைய பிணங்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்டு, தமிழ்நாட்டின் கரை ஓரப்பகுதிகளில் ஒதுங்கிக் கிடப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது. தனுஷ்கோடியில் கடும் புயல் வீசி, கடல் கொந்தளிப்பில் நூற்றுக்கணக்கான பேர் பலியான செய்தி அறிந்து, இங்கிலாந்து ராணி எலிசபெத் துயரம் அடைந்தார்.
ஜனாதிபதி ராதாகிருஷ்ணனுக்கு அனுதாப செய்தி அனுப்பினார். புயல் வீசிய நேரத்தில் நடிகர் ஜெமினிகணேசனும், சாவித்திரியும் ராமேசுவரத்துக்கு சென்றிருந்தார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்பதே தெரியாமல் இருந்தது. இதனால் ரசிகர்கள் பெரிதும் பதற்றமும், பரபரப்பும் அடைந்தனர். சாவித்திரியும், ஜெமினிகணேசனும் அதிசயமாக உயிர் தப்பிய தகவல், மறுநாள்தான் தெரிய வந்தது.

அரியலூர் ரயில் விபத்து 250 பேர் பலி

தமிழ்நாட்டில் நடைபெற்ற ரெயில் விபத்துகளில், அரியலூர் ரெயில் விபத்து மிகவும் பயங்கரமானதாகும். அதில், 250 பேர் பலியானார்கள். விபத்துக்கு தார்மீகப் பொறுப்பு ஏற்று அன்றைய ரெயில் மந்திரி லால்பகதூர் சாஸ்திரி ராஜினாமா செய்தார். திருச்சியில் இருந்து 35 மைல் தூரத்தில் அரியலூருக்கும், கல்லகம் என்ற ரெயில் நிலையத்துக்கும் இடையே "மருதையாறு" என்ற காட்டாறு ஓடுகிறது.  

இதன் மீது ரெயில்வே பாலம் இருக்கிறது. அந்த பகுதியில் தொடர்ந்து 4 நாட்களாக மழை பெய்ததால் காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த திடீர் வெள்ளத்தின் காரணமாக ரெயில் பாலத்தை சுற்றிலும் அரிப்பு ஏற்பட்டது. தண்ணீர் ஓடுவதால் அது வெளியே தெரியவில்லை. 

23-11-1956 நள்ளிரவில் பல ரெயில்கள் அந்த பாலத்தின் வழியாக சென்றன. அதிகாலை 5-30 மணி இருக்கும். சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. "தூத்துக்குடி எக்ஸ்பிரஸ்" ரெயில் பாலத்தின் மீது சென்றது. அந்த நேரத்தில் பாலம் திடீரென்று இடிந்தது. பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த ரெயில் என்ஜின் மற்றும் 7 பெட்டிகளும் ஆற்றுக்குள் கவிழ்ந்து வெள்ளத்தில் மூழ்கின. 

இந்த பெட்டிகளில் நான்கு பெட்டிகள் 3-ம் வகுப்பு பயணிகள் சென்றது. (இதில் ஒன்று பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது) 2 பெட்டிகள் 2-ம் வகுப்பு பயணிகளுக்குரியது. ஒரு பெட்டி பார்சல் வண்டியாகும். பெட்டிக்கள் ஒன்றோடு ஒன்று மோதி கவிழ்ந்ததால் பலர் இடிபாடுகளில் சிக்கி நசுங்கினார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் வெள்ளத்தில் மூழ்கி இறந்தார்கள். 

விபத்தில் பலியான பெண்கள், கைக்குழந்தைகளின் உடல்கள் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தன. விபத்து நடந்த இடத்தைச் சுற்றி ஒரு மைல் சுற்று வட்டாரத்தில் வெள்ளம் சூழ்ந்திருந்தது. அந்த ஆறு ரத்த ஆறு போல பயங்கரமாக காட்சி அளித்தது. இந்த ரெயில் விபத்தில் ரெயில் என்ஜின் டிரைவர் எம்.ஜி.துரைசாமி, பயர்மேன்கள் முனுசாமி, கோதண்டன், சென்னை மைலாப்பூரைச் சேர்ந்த பிரபல பாட்டுக்காரியான சாவித்திரி (கணேசன்) உள்பட 250 பேர் பலியானார்கள். 

ரெயில் கார்டுகள் வைத்தியநாதசாமி, ஆறுமுகம் இருவரும் உயிர் தப்பினார்கள். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு ஆற்றங்கரையில் குவியல் குவியலாக வைக்கப்பட்டது. அடையாளம் காணமுடியாத 60 உடல்கள் ஒரே குழியில் புதைக்கப்பட்டன. அரியலூர் விபத்து பற்றி கேள்விப்பட்டதும் கவர்னர் ஸ்ரீபிரகாசா கண்ணீர் விட்டார். 

டெல்லியில் மத்திய ரெயில்வே உதவி மந்திரியாக தமிழ் நாட்டைச் சேர்ந்த ஓவி.அளகேசன் பதவி வகித்தார். விபத்து செய்தி கிடைத்தவுடன் அளகேசன் அரியலூர் வந்தார். ஆற்றில் ரெயில் கவிழ்ந்து கிடந்ததையும், ரத்த வெள்ளத்தில் பிணங்கள் கிடந்ததையும் பார்த்தார். ஆற்றங் கரையில் குவியல் குவியலாக பிணங்கள் வைக்கப்பட்டிருந்ததை பார்த்து அளகேசன் கண்ணீர் விட்டார். 

அங்கேயே அவர் சோர்ந்து போய் உட்கார்ந்திருந்தார். இரவு வெகு நேரம் வரையில் நின்றிருந்து பிணங்கள் மீட்கப்படுவதை பார்வையிட்டார். சென்னைக்கு திரும்பிய அளகேசன் நிருபர்களிடம் கூறியதாவது:- 

இதுபோன்ற பயங்கர விபத்தை நான் பார்த்ததே இல்லை. விபத்து சேதங்களையும், பிணக்குவியல்களையும் பார்த்து நிலைதடுமாறி அதிர்ச்சி அடைந்துவிட்டேன். ரெயில் கவிழ்ந்த ஆற்றுப்பாலம் நன்றாகத்தான் இருந்தது. பேய் மழையின் காரணமாக பாலத்தின் முகப்பில் மண் அரிக்கப்பட்டதால் தண்டவாளம் மட்டும் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. இதனால் ரெயில் ஆற்றுக்குள் விழுந்து விட்டது. 

இவ்வாறு அவர் கூறினார். 

மத்திய மந்திரிகள் சி.சுப்பிரமணியம், பக்தவச்சலம் ஆகியோரும் விபத்து நடந்த இடத்துக்குச் சென்று பார்த்தார்கள். பெண்கள் பயணம் செய்த ரெயில் பெட்டி மண்ணோடு மண்ணாக சகதியில் புதைந்து போனது. அதற்குள் கிடந்த பிணங்கள் அழுகி துர்நாற்றம் வீசியது. இதனால் பிணங்களை மீட்க முடியவில்லை. 

அந்த பெட்டியை கரையில் எடுத்துப் போட்டு பெட்ரோல் ஊற்றி கொளுத்தினார்கள். ரெயில்வே மந்திரியாக லால்பகதூர் சாஸ்திரி இருந்து வந்தார். தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் ஆற்றுக்குள் கவிழ்ந்து பயங்கர விபத்து ஏற்பட்டதால் அதற்கு பொறுப்பு ஏற்று லால்பகதூர் சாஸ்திரி மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். லால்பகதூர் சாஸ்திரியின் ராஜினாமாவை பிரதமர் நேரு ஏற்றுக்கொண்டார். இதுபற்றி பிரதமர் நேரு சொன்னதாவது:- 

ஐதராபாத்தில் ரெயில் விபத்து ஏற்பட்டவுடன் பதவியை ராஜினாமா செய்ய லால் பகதூர் சாஸ்திரி முன்வந்தார். ஆனால் நான் அதை ஏற்கவில்லை. இப்போது "தூத்துக்குடி எக்ஸ்பிரஸ்" கவிழ்ந்ததும் மறுபடி ராஜினாமா கடிதம் எழுதி கொடுத்திருக்கிறார். 

"இந்த விபத்துக்கு நானே பொறுப்பு" என்று மந்திரி அவருடைய ராஜினாமா கடிதத்தில் சொல்லியிருக்கிறார். இந்த கடிதம் கிடைத்தவுடன் நான் அவருடன் விரிவாக மனம் விட்டுப்பேசினேன். இந்த தடவை ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதே சரி என்ற முடிவுக்கு நான் வந்திருக்கிறேன். 

அவருடைய ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதால் தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் விபத்துக்கு லால்பகதூர் சாஸ்திரியே காரணம் என்று அர்த்தம் இல்லை. ஆனால் இந்த மாதிரி ராஜினாமா செய்வதுதான் முறை என்பதை எடுத்துக்காட்டவே இதற்கு நாம் சம்மதம் கொடுத்தேன். என்ன ஏற்பட்டாலும் சரி, கொஞ்சம் கூட கவலைப்படாமல் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கலாம் என்ற நினைப்பு யாருக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது. இதை முன்னிட்டே ரெயில்வே மந்திரியின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள முடிவு செய்தேன்." 

இவ்வாறு நேரு கூறினார். 

லால்பகதூர் சாஸ்திரி மந்திரி பதவியை ராஜினாமா செய்ததற்கு ஒரு பின்னணி இருந்தது. அரியலூர் ரெயில் விபத்து ஏற்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் ஒரு ரெயில் ஆற்றில் விழுந்து 126 பேர் கொல்லப்பட்டனர். வெள்ளத்தினால் பாலம் சேதம் அடைந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது. 

"மழைக்காலத்தில் ரெயில்வே பாலத்துக்கு ஆபத்து ஏற்படாத வகையில் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பாலங்கள் சரிவர ரிப்பேர் செய்யப்படும்" என்று லால்பகதூர் சாஸ்திரி உறுதி அளித்து இருந்தார். ஆனால் சில மாதத்துக்குள்ளாக ஐதராபாத் விபத்து போலவே தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கும் விபத்து ஏற்பட்டது.

இதனால் மந்திரி ராஜினாமா செய்யவேண்டும் என்று எதிர்க்கட்சியினர் போர்க்கொடி தூக்கினர். முன்பு கொடுத்த வாக்குறுதி பொய்யாகிவிட்டதே என்று கவலைப்பட்ட லால்பகதூர் சாஸ்திரி விபத்துக்கு பொறுப்பு ஏற்பதாக அறிவித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார். 

பீகார் மாநிலத்தில் 6-6-1981 அன்று ரெயில் ஆற்றுக்குள் விழுந்ததில் 2 ஆயிரம் பேர் உயிர் இழந்தார்கள். விபத்துக்கு உள்ளான அந்த பாசஞ்சர் ரெயில், சமஸ்திபூரில் இருந்து பான்மங்கி என்ற இடத்துக்கு போய்க்கொண்டு இருந்தது. அந்த ரெயிலில் மொத்தம் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தன. 

எல்லா பெட்டிகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. கூரை மீதும் பலர் தொத்திக்கொண்டு பயணம் செய்தனர். தமரகாட் என்ற இடத்தில் கோசி ஆற்று பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தபோது "தட தட" என்று 7 பெட்டிகள் ஆற்றில் கவிழ்ந்தன. என்ஜினும், அதற்கு அடுத்த பெட்டியும் மட்டுமே ஆற்றுக்குள் விழாமல் தப்பின. 

ஆற்றில் வெள்ளம் போய்க்கொண்டு இருந்ததால் 5 பெட்டிகள் அடியோடு மூழ்கின. இந்த ரெயில் விபத்தில் 200 பேர் பலியானதாகவும், பின்னர் அது 800 பேர் என்றும் கூறப்பட்டது. ரெயில் விபத்தில் செத்தவர்கள் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. என்றாலும் விபத்து நடந்தபோது ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி இருக்கிறது. 

அதனால் 5 பெட்டிகளை வெள்ளம் அடித்துச்சென்று விட்டது. 2 பெட்டிகள் மட்டும் வெள்ளத்துக்குள் மூழ்கி கிடந்தது தெரிந்தது. இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது சாவு எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கு குறையாமல் இருக்கலாம் என்று பீகார் சட்டசபை துணை சபாநாயகர் கஜேந்திரபிரசாத் கிமான்ஷு தெரிவித்தார்.

 சாவு எண்ணிக்கை 3 ஆயிரம் இருக்கும் என்று பீகார் கிராமப்புற வளர்ச்சி மந்திரி சவுத்ரி சலாடீனும் தெரிவித்தார். பீகார் ரெயில் விபத்துதான் உலகிலேயே மிகப்பயங்கரமான பெரிய விபத்தாகும். கடந்த 1917 டிசம்பர் 10-ந்தேதி பிரான்சு நாட்டில் ராணுவத்தினரை ஏற்றிச்சென்ற ரெயில் விபத்தில் சிக்கி 543 பேர் இறந்ததுதான், இதுவரை உலகிலேயே பெரிய ரெயில் விபத்தாக கருதப்பட்டு வந்தது. பீகார் ரெயில் விபத்து அதையும் மிஞ்சி விட்டது.